Sunday, April 14, 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024 : தமிழ்நாடு (கருத்தும் கணிப்பும்) - பகுதி 2

 வணக்கம் !!

ஒவ்வொரு கூட்டணிக்கான பலம் பலவீனங்களை பார்த்துவிட்டு இறுதியாக கருத்துக்கணிப்பின் முடிவுகளை பார்க்கலாம். 


இந்தியா கூட்டணி 

பலம் 

* இந்தியா கூட்டணி என்ற பெயரில் பாஜகவை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கூட்டணி கடந்த இரண்டு தேர்தல்களை விடவும் பாஜகவிற்கு கடும் போட்டியாக அமைவதால் பலம்.

* தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்தது. 

* கடந்த முறை அமைத்த அதே கூட்டணியை தொடர்வது.

* திமுகவிற்கான கட்டமைப்பு பலம், ஆட்சி பலம்.

* ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என அதிகார மையங்களின் கீழ் கட்சியை வழிநடத்தி செல்வது, பிரச்சார திட்டமிடல்.

* தொகுதிகளில் அமைச்சராக உள்ள (அ) முக்கிய தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுவதால் அந்த தொகுதியை மட்டும் குறி வைத்து வேலை செய்யும் தலைவர்கள். 

* பத்தாண்டுகால ஆட்சிக்கு இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யும் பொருட்டு திமுக மத்திய அரசை கடுமையாக எதிர்ப்பது.

* பாஜக எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி கமலின் மக்கள் நீதி மையம் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது.

* வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து அளித்திருப்பது. 

* அச்சு ஊடக, காட்சி ஊடக, இணைய ஊடகத்தில் விளம்பரம் செய்வதில் முன்னிலை பெறுவது.   

* பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட சில திட்டங்களை முன்னிலைப்படுத்தி ஓட்டு கேட்பது.

*சென்னையை உள்ளடக்கிய மத்திய மண்டலம்  வழக்கம்போலவும், கூடவே தென் மண்டலமும் திமுகவிற்கு ஆதரவாக இருப்பது. 

பலவீனம் 

* வாரிசு அரசியல், ஊழல் கட்சி என திமுக மீது வைக்கப்படும் விமர்சனம்.

* கடந்த முறை வெற்றி பெற்ற எம்.பிக்களால் உபயோகம் இல்லாமல் போனது.

* பெரும்பாலான எம்.பிக்கள் தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தது. 

* எப்படி இருந்தாலும் மத்தியில் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என நம்பப்படுவதால் பாதகமாக அமைவது.

* பெண்களுக்கான திட்டங்கள் பல அனைவரிடத்திலும் சென்று சேராமல் இருப்பது.

* போன முறை ஆட்சிக்கு வருவதற்கு திமுக கையிலெடுத்த "நீட் ரகசியம்" ,"எய்ம்ஸ் மருத்துவமனை" இம்முறை அவர்களுக்கு எதிராக திரும்பியிருப்பது. 

* சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகள். (திருச்சியில் மதிமுகவின் துரை வைகோவிற்கும் திமுகவிற்கும் & நாமக்கல்லில் எதிர்ப்பு காரணமாக வேட்பாளரை மாற்றிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)

*கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் பல நிறைவேற்றப்படாமல் இருப்பது.

அதிமுக கூட்டணி 

பலம் 

* கட்சி ரீதியான கட்டமைப்பு பலம். 

* அதிமுகவை கபளீகரம் செய்யும் முனைப்பில் இருந்த பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கியது. 

* பாஜக பிரிவுக்கு பின் தலைமையின் தொடர் பிரச்சாரத்தால் தொண்டர்கள் உற்சாகமடைந்திருப்பது.

* கூட்டணியில் உள்ள தேமுதிக விஜய்காந்த் மறைவிற்கு பின் எழுச்சியுடன் களம் காண்பது.

* கூட்டணியில் பாஜக இல்லாததால் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவது.

* 2019 இல் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளால் சிதறிப்போன வாக்குகள் மீண்டும் வர ஆரம்பித்திருப்பது.

* முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக செயல்பட்டு விளம்பரத்தில் முந்துவது

* புள்ளி விவரத்துடனும், திமுகவுக்கு ஆதாரத்துடன் காணொளி வாயிலாக தக்க பதிலடியும் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், இது ரொம்ப புதுசா இருக்கே என்ற வகையில் அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேடை பிரச்சாரத்தில் முன்பை விட முன்னேறி வருவது.   

* ஆதரவுக்கரம் நீட்டும் கொங்கு மண்டலம். 

பலவீனம் 

* நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லாதது 

* பாமக, தமாகா உட்பட சில கட்சிகளை கூட்டணிக்கும் வைக்கமுடியாமல் போனது 

* தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகள் தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என பிரிந்து செல்வது 

* முக்கிய தலைவர்கள் யாரும் இத்தேர்தலில் போட்டியிடாதது. 

* வடக்கு மண்டலத்தில் பாமக பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவிற்கு ஏற்படும் வாக்கு இழப்பு. 

* சட்ட சிக்கலை தாண்டி, கட்சி பிளவுகளை தாண்டி, அதிமுகவிற்கு நிலையான ஒரு தலைமையாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் உருவாவதற்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடிய காலம்.

தேசிய ஜனநாயக கூட்டணி 

பலம் 

* மோடியின் முகமும் அண்ணாமலையின் பரப்புரையும் 

* திமுகவிற்கு எதிரி நாங்கள்தான் என முன்னிறுத்துவது 

* அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என சொல்ல தொடங்கி இருப்பது (திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் தங்கள் வசம் வர)

* இறுதியாக அதிமுக, திமுக இல்லாமல் கூட்டணியை உருவாக்கி இருப்பது 

* தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடியின் தொடர் விஜயம்.

* பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் களத்தில் இருப்பது 

* இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சில தொகுதிகளை குறி வைத்து வேலை செய்வது (நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை உட்பட )

* ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பலமும், இந்துத்துவா அடிப்படையில் திரளும் வாக்குகளும். 

பலவீனம் 

* தமிழ்நாடு முழுவதும் பரவலாக வாக்கு கொண்ட கட்சிகளாக கூட்டணிக்கட்சிகள் இல்லாதது (தென் தமிழகத்தில் அமமுக, வட தமிழகத்தில் பாமக, கொங்கு பகுதியில் பாஜக, அதே போல் மற்ற கூட்டணி கட்சிகளும் ) 

* கூட்டணியில் இருக்கும் அணிகளின் வாக்குகள் அனைத்தும் ஒரு தொகுதியில் ஒருசேர திரள்வதற்கான வாய்ப்பில்லாதது. 

* பாமக வாக்குகள் இம்முறை முழுவதுமாக கூட்டணி கட்சிகளுக்கு பரிமாற்றம் அடையாமல்  இன்னும் சொல்லப்போனால் பாமாவிற்கே கிடைக்குமா என தொக்கி நிற்கும் கேள்வி ?

நாம் தமிழர் 

பலம் 

* சீமான் பேச்சும் பிரச்சாரமும் 

* கடைக்கோடி, பாமர மக்களின் ஆதரவு 

* கணிசமான முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு 

* சமூக வலைதள ஆதரவும் பிரச்சாரமும் 

* எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே களம் காண்பது.

* மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக கருதப்படுவது 

* தேர்தலுக்கு தேர்தல் பெருகி வரும் ஆதரவு 

* மக்கள் நீதி மையம் போட்டியிடாததால் அங்கிருந்து பெறப்போகும் வாக்குகள் 

* ஆண்ட கட்சிகளின் மீதான வெறுப்பை அறுவடை செய்யும் கட்சியாக இருப்பது 

பலவீனம் 

* வேட்பாளர் தேர்வு பல இடங்களில் சரியாக அமையாதது 

* இரண்டாம் கட்ட தலைவர்களோ, தொகுதியில் வலிமை பெற்ற தலைவர்களாகவோ யாரும் உருவாகாமல் இருப்பது. 

* கரும்பு விவசாயி சின்னத்தை பெற முடியாமல் போனது 

* சீமான் பேச்சை மட்டும் நம்பி இருப்பது 

* சில இடங்களில் கோபமாகி தன் நிலையிலிருந்து தவறி நடந்துகொள்ளும் கட்சித்தலைமை 

தொகுதிகளும் போட்டியிடும் வேட்பாளர்களும் 

39 தொகுதிகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டில் 32 தொகுதிகள் பொதுத்தொகுதியாகவும் 7 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் போட்டியிடுவதற்கான தனித்தொகுதிகளாகவும் உள்ளன. தென்காசி, நாகப்பட்டினம், சிதம்பரம், நீலகிரி, விழுப்புரம், காஞ்சிபுரம்,  
திருவள்ளூர் ஆகியன தனித்தொகுதிகள் ஆகும். 


நான்குமுனை போட்டியில் யாருக்கு வெற்றி 

இத்தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சியிம்   வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாலும் ஒரு கட்சிக்கு ஆதரவான அலையோ எதிரான அலையோ இல்லாததாலும் போட்டி கடுமையாகவே  உள்ளது. நாம் தமிழர் கட்சி கடும் போட்டியை கொடுத்தாலும் வெற்றி பெற கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லாததால் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை மையப்படுத்தியே கணிப்பையும் செய்ய முடிகிறது. ஆளும் திமுகவை பொறுத்தவரை பெரிய புள்ளிகள் களத்தில் இருப்பதால் அவர்கள் நிற்கக்கூடிய தொகுதியில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாலும் பணம் செலவழிக்க முடியாத நிலையிலும் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது வெற்றி பெறுவதற்கு. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கடும் உழைப்பை கொடுத்தாலும் கொங்கு மண்டல பகுதிகளிலும் சில தனித்தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கே அவர்களுக்கு வாய்ப்புள்ளது. மற்ற தொகுதிகளில் நெருக்கடியை தரலாம். பாஜக கூட்டணியை பொறுத்தவரையில் கட்சிக்கான அடையாளத்தை தாண்டி தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை கொண்டவர்களுக்கே வெற்றி கிட்டலாம். அந்த வகையில் கோவை(அண்ணாமலை ), தருமபுரி(சௌமியா), தேனி(தினகரன்) பாஜகவிற்கு சாதகமாக இருக்கலாம். இது தவிர எல்.முருகன், வினோஜ் பி.செல்வம், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தராஜன், ஏ.சி.சண்முகம், பச்சமுத்து ஆகியோர் மதிப்புக்குரிய வாக்குகள் வாங்கலாம்.

இழுபறியாகும் தொகுதிகள் 

நம் கணிப்பின்படி, 14 தொகுதிகளை தவிர மீதி உள்ள தொகுதிகளில் இழுபறி இருப்பதாகவே தெரிகிறது.  சில தொகுதிகளில் இருமுனை போட்டியாகவும் சில தொகுதிகளில் மும்முனை போட்டியாகவும் வேறு வேறு கட்சிகளுக்கு இடையிலும் அமைகிறது. அதன்படி 

8 தொகுதிகளில் திமுக(கூ) - அதிமுக(கூ) - பாஜக(கூ) 
திருநெல்வேலி, கடலூர், இராமநாதபுரம், தேனி, தென் சென்னை, வேலூர், நீலகிரி (தனி), பெரம்பலூர் உட்பட 8 தொகுதிகளில் மூன்று கூட்டணிக்கு இடையிலும் போட்டி நிலவுகிறது.  

14 தொகுதிகளில் திமுக(கூ) -அதிமுக(கூ)
கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நாமக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, ஆரணி, திருச்சிராப்பள்ளி, சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), தருமபுரி, திண்டுக்கல் உட்பட 14 தொகுதிகளில் திமுகவுடன் மல்லுக்கட்டுகிறது அதிமுக. 

2 தொகுதிகளில் பாஜக(கூ) - அதிமுக(கூ)
கோயம்புத்தூர், தென்காசி (தனி) - இங்கு போட்டியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுகிறது திமுக.

1 தொகுதியில் பாஜக(கூ) - திமுக(கூ)
கன்னியாகுமரியில் போட்டி காங்கிரசுக்கும் பாஜவிற்கும்தான். மூன்றாவதே அதிமுக. 

கருத்துக்கணிப்பு முடிவு 

நான் இதுவரை தந்த தரவுகள் அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் பின்வருமாறு அமைகிறது என் கருத்துக்கணிப்பு. 



அதாவது ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் முழு மூச்சுடன் வேலை செய்யும் பட்சத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 28 திமுகவிற்கும், 9 அதிமுகவிற்கும், 2 பாஜகவிற்கும் செல்லலாம். ஆனால் நாம் இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதிமுக எந்த தேசிய கட்சியுடனும் இணைந்து போட்டியிட வில்லை என்பதாலும் பாஜகவிற்கு போன முறையை விட இம்முறை வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்பதாலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை பொறுத்து அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சில இழுபறி தொகுதிகளில் பறிபோகலாம். அதாவது 9-ல் இருந்து குறையலாம். அப்படி குறையும்போது அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிக்கு போகலாம். அதாவது 28-ல் இருந்து அதிகரிக்கலாம். எவ்வளவு குறைகிறது அல்லது அதிகரிக்கிறது என்பதை ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுதான் சொல்ல முடியும். 

இத்தேர்தலை பொறுத்தவரை, இன்றைய சூழ்நிலையில்,  ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றி எது ? மாபெரும் வெற்றி எது ?

திமுக(கூ) - நான் மேலே குறிப்பிட்ட 28-ஐ பெற்றால் வெற்றி. 35-க்கு மேல் பெற்றால் மாபெரும் வெற்றி. 

அதிமுக(கூ) - அனைத்து தொகுதிகளிலும் கடும் நெருக்கடி அளித்து 2-ஐ பெற்றாலே வெற்றிதான். 9-ஐயும் பெற்றால் மாபெரும் வெற்றி. 2026 சட்டமன்ற வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். 

பாஜக(கூ) - இம்முறை வாக்கு சதவிகிதம் 8 - 12 சதவிகிதத்தை தொட்டால் வெற்றி. 2 தொகுதிகளில் வெற்றியோ (எ) வாக்கு சதவிகிதம் 15-ஐ தொட்டாலோ மாபெரும் வெற்றி. 

நாம் தமிழர் - போன முறை வாங்கியதை விட அதிகம் பெற்றால் வெற்றி. ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றிக்கு அருகாமையில் வந்தால் மாபெரும் வெற்றி. 
 

நான் சொல்ல விரும்புவது 

சுய அறிவுக்குட்பட்டு சிந்தித்து அனைவரது நலன் காக்கும் பொருட்டு அறத்தின் அடிப்படையில்தான்  வாக்களிக்கின்றீர்களா என உறுதி செய்து கொண்டு வாக்களியுங்கள். நோட்டாவை தவிருங்கள். 

ஏப்ரல் 19 - மறவாமல் வாக்களிப்போம் 
ஒற்றை விரலால் அறம் காப்போம். 

நன்றி வணக்கம் ! உங்களது மேலான கருத்துக்களை கீழே பதிவிடுங்கள். 

அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ? கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல்  அரசியல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

நாடாளுமன்ற தேர்தல் 2024 : தமிழ்நாடு (கருத்தும் கணிப்பும்) - பகுதி 1

வணக்கம். 

முந்தைய இரண்டு பதிவுகளை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான, முக்கியமாக தமிழ்நாட்டிற்கான, தேர்தலுக்கு முந்தைய என்னுடைய கருத்துகளையும் கணிப்புகளையும் வெளியிடுவதற்காகவே இப்பதிவு. 

சரியாக அமைந்த 2021ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு 

2021-ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது என்னுடைய கணிப்பு மிகவும் சரியாக இருந்ததே இப்பதிவை நான் இடுவதற்கு உந்துதலாக அமைகிறது.   2021-ஆம் ஆண்டு வாக்குப்பதிவு 06-04-2021 அன்றும் வாக்கு எண்ணிக்கை 02-05-2021 அன்றும் நடைபெற்றது. வாக்குபதிவிற்கு முன் 17-03-2021 அன்று நான் வெளியிட்ட பதிவில் திமுக மற்றும் அதிமுகவிற்கு உறுதியாக கிடைக்கும் தொகுதிகள் எனவும் இழுபறி தொகுதிகள் எனவும் கீழ்க்கண்டவாறு கணித்தேன்.


அதன்பிறகு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன் 29-04-2021 அன்று இழுபறி தொகுதிகளில் 70 சதவிகிதம் திமுகவிற்கு சாதகமாக அமையும் எனவும் கணித்தேன். 
                                                                     
இக்கணக்குப்படி,  மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், உறுதியாக கிடைக்கும் என நான் கணித்த எண்ணிக்கையில் திமுகவிற்கு 90-ம் அதிமுகவிற்கு 60-ம் போக மீதி உள்ள 84 இழுபறி தொகுதிகளில் 70 சதவிகித கணக்குப்படி திமுகவிற்கு 59-ம் அதிமுகவிற்கு 25-ம் செல்ல கீழ்க்கண்டவாறு அமைந்தது எனது கணிப்பும் வெளிவந்த முடிவும். 


நான் கணித்ததற்கும் தேர்தல் முடிவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வெறும் 10 மட்டுமே. இதன் அடிப்படையிலேயே அமைகிறது இம்முறை நான் முன்வைக்கும் கருத்துகளும் கணிப்புகளும்.

தேர்தல் அட்டவணை 

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் - தமிழ்நாட்டிற்கான தேர்தல் அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். 

தேதி

நிகழ்வு

20 மார்ச் 2024

மனுத்தாக்கல் ஆரம்பம்

27 மார்ச் 2024

மனுத்தாக்கல் முடிவு

28 மார்ச் 2024

வேட்புமனு ஆய்வு ஆரம்பம்

30 மார்ச் 2024

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்

19 ஏப்ரல் 2024

வாக்குப்பதிவு

04 ஜூன் 2024

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு


அறிவாலும் அனுபவத்தாலும் நான் தரும் கணிப்பு 

நான் மீண்டும் ஒன்றை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். நான் இப்பதிவு எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் பல கணிப்புகளை அச்சு  ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், இணைய ஊடகங்களும், தனியார் நிறுவனங்களும் மாநில அளவிலும் சரி தேசிய அரசியலிலும் சரி வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் வெளியிடுகின்றன. இவற்றில் பல கருத்துக்கணிப்புகள் ஊடக வெளிச்சத்திற்க்காகவும், ஒரு கட்சியின் வெற்றிக்காக/வளர்ச்சிக்காக போலியான பிம்பத்தை உருவாக்குவதற்காகவும், பணத்தை பெற்றுக்கொண்டு உள்நோக்கத்துடனும், சொந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், ஒரு கருத்துக்கணிப்பை அப்படியே பிரதியெடுத்தும்,  மக்களே சிரிக்கும் வகையில் சம்பந்தமில்லாமலும் அமைவது உள்ளபடியே வருந்தத்தக்கதாகவும் கருத்துக்கணிப்பின் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவும் உள்ளது. அப்படி இல்லாமல் உண்மையாகவே இதற்காக மெனக்கெட்டு உழைத்து கருத்துக்கணிப்பை வெளியிட்டர்வர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் தரும் கருத்துக்கணிப்பு கடந்த கால அரசியல் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்ததின் அடிப்படையிலும், தரவுகளை அலசியதின் அடிப்படையிலும், கடந்த 20 நாட்களாக ஒவ்வொரு நாளும் களம் எவ்வாறு மாறுகிறது என்பதன் அடிப்படையிலும், ஒவ்வொரு தொகுதியும் வாழையடி வாழையாக அரசியலை எதிர்கொள்ளும் தன்மையின் அடிப்படையிலும், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த இரு கட்சிகளுக்கிடையே போட்டி என்பதன் அடிப்படையிலும் அமைகிறது. இது சரியாக அமையும் பட்சத்தில் எனக்கு கிடைக்கும் ஆதாயம் ஒரு நிமிட மகிழ்ச்சியும், பெருமையும் மற்றும் அடுத்த பதிவை இடுவதற்கான உத்வேகமும் மட்டுமே. 

ஏன் சவாலாக அமைகிறது இம்முறை கருத்துக்கணிப்பு 

பொதுவாக எந்த செயலாக்கத்திற்கும் அடித்தளமாக ஒரு ஆரம்பப்புள்ளியோ / மையப்புள்ளியோ இருக்க வேண்டுமல்லவா ? அதே போல் இந்நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கருத்துக்கணிப்போ, ஓட்டளிக்கப்போகும் மக்களின் மனமாற்றமோ எங்கிருந்து தொடங்குகிறது என்று சொன்னால், மத்தியில் இம்முறை யார் ஆட்சிக்கு வர வேண்டும் (அ) யார் ஆட்சிக்கு வரக்கூடாது என தீர்க்கமாக களத்தில் பரவும் கருத்துக்களிலிருந்தும், யார் ஆட்சிக்கு வருவார்கள் (அ) யார் ஆட்சிக்கு வரமாட்டார்கள் போன்ற விடைதேடும் வினாக்களிலிருந்தும் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்தாலும் நாமும் இங்கிருந்துதான் தொடங்கவேண்டி உள்ளது. கடந்த கால வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு கட்சியையும்  நாடாளுமன்றத்திற்கு இன்னொரு கட்சியையும் தேர்ந்தெடுக்கும் தன்மைதான் உள்ளது.  ஆக மத்தியில் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என பெரும்பான்மையினர் அளிக்கும் வாக்குகள்தான் கட்சிகளின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன. 

ஒரே மனநிலையை எதிரொலிக்கும் தமிழ்நாடு 

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒரு கட்சிக்கோ / ஆட்சிக்கோ ஆதரவான அலையோ அல்லது எதிர்ப்பலையோ அது அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல் தமிழ்நாடு முழுக்க எதிரொலித்து உள்ளதைத்தான் கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. 1998, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் முடிவுகள் ஒரு கட்சிக்கே/கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள சிக்கல் 

எளிதில் சொல்ல முடியாத அளவுக்கு  இத்தேர்தல் பல்வேறு வகைகளில் சென்று கொண்டிருப்பதால் எனக்கும் இது ஒரு சவாலான காரியமாகவே உள்ளது. 

தேசிய அளவில் பிரதானமாக போட்டிக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே இருந்திருந்தாலும், கடந்த இரண்டு தேர்தல்களிலும் மிக பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாகவும், பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் ஒற்றை முகமாகவும் உலக நாடுகளிடத்தில் சக்தி வாய்ந்த தலைவராகவும் பிரபலமான உலகத்தலைவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். எனவே, பாஜக காங்கிரஸ் என்றிருந்த நிலை மாறி தற்சமயம் பாஜக (மோடி) மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லை வரக்கூடாதா என்ற ஒற்றை புள்ளியில் இணைகிறது அனைத்து கூட்டணிகளும் கள சூழ்நிலைகளும் செயல்பாடுகளும். காங்கிரசை பொறுத்தவரையில் தாங்கள் செல்வாக்கு இழந்து வருவதை உணர்ந்ததால் நேரு குடும்பத்தினரான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வகித்த காங்கிரஸ் தலைவர் பதவி சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கே வசம் வந்தது. அத்துடன் எப்படியாவது பாஜகவை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கமுடியாத நிலையில் மாநிலக்கட்சிகள் பலத்துடன் "இந்தியா  கூட்டணி" என்ற பெயரில் கூட்டணி  அமைத்து போட்டியிடுகிறது. 

தேசிய கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளாக வாக்கு பலத்துடன் இருப்பவை திமுகவும் அதிமுகவும். 2021-ஆம் ஆண்டில் இருந்து ஆளும் கட்சியாகவும், 2019-இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றி பெற்ற உத்வேகத்தில் உள்ள திமுகவும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களாலும் பிளவுகளாலும் நிலைகுலைந்த அதிமுக அதிலிருந்து மீண்டெழும் தீவிரத்துடனும் தேர்தல் களத்தில் மோதுகின்றன. 

கணிப்பில் அனைத்து கூட்டணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் என்ன ?

இப்படிப்பட்ட நிலையில், இத்தேர்தலில் திமுக + காங்கிரஸ் ஓர் அணியிலும், அதிமுக ஓர் அணியிலும், பாஜக ஓர் அணியிலும், வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி தனியாகவும் தமிழ்நாடு முழுவதும் களம் காண்கின்றன.  நான்கு கூட்டணி அதனால் நான்கு முனை போட்டி என்று பெயரளவுக்கு இல்லாமல் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதால் யாரையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. அதற்கான காரணம் பின்வருமாறு.

காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில்  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட்டணியில் உள்ள திமுக ஆளும்கட்சியாக வலுவான நிலையில்  உள்ளதாலும் தேசிய அளவில் 'இந்தியா கூட்டணி' அமைப்பதில் முக்கிய பங்காற்றுவதாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மத்திய அரசில் அங்கம் பெற முடியும் என்ற நிலையில் வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளுக்கு ஏற்ப போட்டியில் முதன்மையாக நிற்கின்றனர்.

மற்ற எந்த கட்சிகளை விடவும் தொண்டர்கள் பலத்தில் எப்பொழுதும் வலுவாக இருப்பது அதிமுக. நான் முன்னரே ஒரு பதிவில் சொல்லியது போல, ஒவ்வொரு கட்சியும் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்கும் பட்சத்தில், அதிமுகவே வெற்றி பெறும். அதனாலேயே தனித்து நின்றாலும் 2014-இல் 37 தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. இம்முறை தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவும் தீவிரமாக பணியாற்றுவதால்  அவர்களையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது. 

கடந்த 10 வருடங்களாக பாஜக ஆட்சியில் இருந்ததால், தமிழ்நாட்டில் பாஜகவினை எப்படியெல்லாம் வளர்க்க முடியுமோ அத்துனை வழிகளிலும் முயற்சி செய்தனர்.  இம்முறையும் பாஜக ஆட்சிதான் என நம்பப்படுவதாலும், மோடியின் முகமும், அண்ணாமலையின் வரவும், அவரது களப்பணியும், "என் மண் என் மக்கள்" யாத்திரையும் தமிழ்நாட்டில் பாஜகவை ஒரு மாற்று சக்தியாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளது என்றால் உண்மைதான். இவர்கள் அமைத்துள்ள கூட்டணியும் கைகொடுக்கும் பட்சத்தில் சில தொகுதியில் வெற்றியும் பல தொகுதியில் கடும் நெருக்கடியும்  கொடுக்க முடியும் என்பதால் இவர்களும் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட வேண்டியவர்கள்தான் கருத்துக்கணிப்பில். 

எப்பொழுதும் தனித்தே போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவிகிதம் பெறுவதால் ஒரு கட்சி வெற்றி பெறுவதையும் தோல்வி அடைவதையும் பல தொகுதிகளில் இவர்களே தீர்மானிக்கின்றனர்.  அவர்களே நாம் தமிழர் கட்சி. வெற்றி பெற முடியாவிட்டாலும் மற்ற கட்சிகளுக்கு வாக்குகள் செல்வதை செவ்வனே தடுத்து மாற்றத்துக்காக நிற்பதால் இவர்களையும் போட்டியில் வைப்பதே நியாயம். இவர்கள் வாங்கும் வாக்குகளை பொறுத்தே இழுபறி தொகுதிகளின் முடிவு. 

ஆக யார் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதை எளிதாக கணிக்கமுடிந்தாலும் கூட, வெற்றி பெற கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை கணிப்பதில் உள்ளபடியே இந்நான்குமுனை போட்டியில் சற்று கடினமாகவே உள்ளது. 

கூட்டணி கணக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளும் 

கூட்டணி எப்படி அமைகிறது 
1. கொள்கை அடிப்படையில் அமைகிறது.
2. பெரும்பாலான கட்சி தொண்டர்களின் முடிவுக்கு ஏற்ப அமைகிறது.
3. மாநில, தேச நலனை முன்னிறுத்தி அமைகிறது 

போன்ற செய்திகளை நீங்களும் நம்புகின்றீர்களா ? தயவுசெய்து நம்பிவிடாதீர்கள். 

உண்மையாலுமே கீழ்காணும் பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே அமைகிறது கூட்டணி 
1. யாருடன் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் இணையும் கட்சிகள். 
2. எங்கு சேர்ந்தால் மத்திய அமைச்சர் பதவி, மாநிலங்களவையில் இடம் , ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்பதன் அடிப்படையில் இணையும் கட்சிகள்.   
3. அதிக பணம் தருபவருடன் மட்டுமே கூட்டணி என்பதன் அடிப்படியில் இணையும் கட்சிகள்.
4. அடுத்து வர கூடிய சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இணையும் கட்சிகள்.
5. ஒவ்வொரு  தொகுதியிலும் யாருக்கு செல்வாக்கு, எந்த கட்சிக்கு பலம், வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி எது, அச்சாதிக்கான கட்சி எது என்பதெல்லாம் ஆராய்ந்து கூட்டணிக்குள் இழுக்கப்படும் கட்சிகள்.  
6. வழக்கு, சோதனைகளிலிருந்து தப்பிக்க கூட்டணியில் சேர்ந்து சமரசம் செய்து கொள்ளும் கட்சிகள்.
7.  அதே வழக்கு, சோதனை நடத்தப்படும் மற்றும் எதிர்கால வாழ்க்கை சீர்குலைக்கப்படும் என கட்டாயப்படுத்தப்பட்டு நிர்பந்திக்கப்பட்டு கூட்டணியில் இணைப்படும் கட்சிகள். 
8. ஒரு கூட்டணியில் இடம் இல்லை என்பதால் இன்னொரு கூட்டணியில் இடம் பெரும் கட்சிகள். 
9. தங்கள் இருப்பை காட்டி கொள்ள கூட்டணியில் இணையும் கட்சிகள் / ஆதரவளிக்கும் காட்சிகள்  
10. வேடந்தாங்கல் பறவை போல தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து ஆர்ப்பரிக்கும் சில செல்வந்தர்களின் கட்சிகளும் கூட்டணியில் அடக்கம். 
11. இது தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக (கட்சி தோல்வியடைந்தாலும் கட்சித்தலைவர் எப்படியாவது வெற்றிபெற வேண்டும், பதவி கிடைக்க வேண்டும் போன்ற  அரசியல் ஆதாயத்திற்காக) கூட்டணி கணக்கை திட்டமிடும் கட்சிகள்.

இது தவிர இன்னும் பல பல அழுக்கான காரணங்கள்தான் ஒவ்வொரு கூட்டணிக்கு பின்னாலும் ஒளிந்திருக்கின்றன. 

இதுபோன்ற காரணங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள கீழ்கண்ட கூட்டணிக்கு பின்னாலும் இருக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

இந்தியா கூட்டணி
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளே இம்முறையும் கூட்டணியில் தொடர்கின்றன. கூடுதலாக கடந்த முறை தனித்து களம் கண்டு கவனம் ஈர்த்த கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் இம்முறை ஆளும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் திமுகவில்  இணைந்துள்ளது. பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை இணைத்து தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி தமிழ்நாட்டிலும் திமுக தலைமையின் கீழ் தொடர்கிறது. கூட்டணியில் இணைந்துள்ள அணைத்து கட்சிகளும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அதிகம் கேட்டதாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெறுவதில் விடாப்பிடியாக இருந்ததாலும், சொந்த சின்னத்தில் நிற்பதில் உறுதியாக இருந்ததாலும் தொகுதிப்பங்கீடு சற்றே காலதாமதமானாலும் கீழே கண்டவாறு பகிரப்பட்டுள்ளது. 


அதிமுக கூட்டணி
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பல பிளவுகளால் கட்சி சிதைவுண்டு வருவதை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க திட்டமிட்டது  அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக. அதனால் திமுகவின் உண்மையான எதிரி நாங்கள் தான் என திமுக எதிர்ப்பை மிகவும் தீவிரமாக கையில் எடுத்து அதிமுக சார்பு வாக்குகளை பெற முயற்சித்தனர். பாஜகவை பொறுத்தவரையில் இது ஒரு நல்ல முயற்சியாகவே என்னால் பார்க்க முடிந்தது. ஓரளவு இதில் அவர்கள் வெற்றியும் பெற்றதாகவே நான் கருதுகிறேன். இது அதிமுகவிற்கும் தலைமைக்கும் தெரிந்திருந்தாலும் கூட மத்தியில் மோடி ஆட்சியில் இருப்பதால் வேறு வழி இல்லாமல் மௌனம் காத்த அதிமுக, இதற்கு மேல் விட்டால் கட்சி மேலும் வலுவிழந்து விடும் என்பதாலும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற நிலையிலும் துணிச்சலாக முடிவெடுத்து கடந்த வருடம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம் என்று கூறி வந்த அதிமுக கூட்டணிக்கதவுகளை திறந்தே வைத்திருந்தது. முக்கியமாக பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் போன முறை கூட்டணியில் இருந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களை தக்க வைக்க முயற்சிகள் எடுத்தனர். அதிக தொகுதிகளை கேட்டதன் அடிப்படையில் நீடித்துக்கொண்டே போன தொகுதிப்பங்கீட்டில் இறுதியில் தேமுதிக மட்டும் அதிமுக பக்கம் வந்தது. இது தவிர புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ  கட்சிகளையும்  சேர்த்து அதிமுகவும் கூட்டணியாகவே போட்டியிடுகிறது. 


தேசிய ஜனநாயகக் கூட்டணி

போன முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 4 சட்டமன்ற தொகுதிகளை பெற்றிருந்த பாஜக இம்முறை நாடாளுமன்றை தேர்தலை மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்தது. மாநிலத்தில் அதிமுக ஆதரவுடனும், மத்தியில் எப்படியும் மோடிதான் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கை அடிப்படையிலும் தீவிர களப்பணியாற்றிய அண்ணாமலை மற்றும் பாஜகவிற்கு அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது வெளியே சொல்லாமல் இருந்தாலும் உண்மையில் வருத்தப்படக்கூடிய செய்தியாகத்தான் இருந்திருக்கும். அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு வரவழைக்க தேசிய தலைமை வரை முயன்றும் சாத்தியப்படாததால் எப்படியும் ஒரு மெகா கூட்டணியை அமைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து விதமான தங்களது அதிகாரங்களையும்  வியூகங்களையும் பயன்படுத்தி பாமக(அன்புமணி ), தமாகா(வாசன் ), அமமுக (தினகரன்), பன்னீர்செல்வம் (சுயேச்சை) உட்பட சிறிய கட்சிகளையும் உள்ளிழுத்து ஒரு பெரும் கூட்டணியாக கட்டமைத்துள்ளனர். இது இல்லாமல் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளார் சரத்குமார்.    


தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் கட்சி
தனித்து நிற்பது எளிதானதல்ல. ஆனால் அதை சாத்தியப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. அதற்க்காகவே இக்கட்சிக்கு வாக்களிக்க கூடியவர்கள் ஏராளம். அதே போல் பிற்படுத்தப்பட்டோருக்காக இயங்கக்கூடிய தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்து களம் இறங்குகிறது. தமிழகம் முழுவதும் சேர்த்து தோராயமாக இரண்டு லட்சம் வாக்குகள் இவர்களுக்காக உள்ளது. 


வேட்பாளர் பட்டியல்
    39 தொகுதிகளிலும் போட்டியிடும் நான்கு முனை போட்டியில் மல்லுக்கட்டும் வேட்பாளர்களை கீழே காணலாம். 


எங்கிருந்து பிரிந்து எங்கு செல்கிறது வாக்குகள்: மக்களின் மனநிலை மாற்றமும், ஒருசேர திரளும் (அ) பரிமாற்றத்தால் பகிரப்படும் வாக்குகளும் 

1. ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான மனநிலை எப்பொழுதும் இருக்கத்தான் செய்யும். அந்த எதிர்ப்பு வாக்குகள் எங்கு செல்கிறது?
2. நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அளிக்கப்படும் வாக்குகள். இது எந்த கட்சிக்கு செல்கிறது?
3. கட்சியின் செயல்பாடுகளால் திருப்தியில்லாத / உற்சாகமடையாத கட்சி உறுப்பினர்களின், தொண்டர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ?
4. முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ? இளைஞர்கள் வாக்குகள் எங்கு செல்கிறது?
5. நகர்ப்புற வாக்குகள் எங்கு செல்கிறது ? கிராமப்புற வாக்குகள் எங்கு செல்கிறது ?
6.  அதிகமாக கேட்கப்படும் இந்த கேள்விக்கான பதிலை  பொறுத்து முடிவு செய்யப்படும் வாக்குகள். ஓட்டுக்கு பணம் வந்துவிட்டதா ?
7. பெரும்பாலான மக்களின் மன ஓட்டத்தில் இருந்து, கருத்துக்கணிப்பில் இருந்து இவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் நமது ஓட்டை ஏன் வீணடிக்க வேண்டும் என வாக்களிப்பவர்களின் வாக்குகள் எங்கு செல்கிறது ?
8. கண்களுக்கும் காதுகளுக்கும் முக்கியமாக ஆழ்மனதிற்கும் நினைவகத்திற்கும் செல்லும் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஏராளம். இப்படியாக மாறும் வாக்குகள் எந்த கட்சிக்கு அதிகம் சென்றடைகிறது ? 
9. தமக்கோ, தமது தொகுதிக்கோ யார் வந்தால் நல்லது என்பதன் அடிப்படையில் செலுத்தும் வாக்குகள் எப்படி பிரிகிறது ?
10. உள்ளபடியே யார் நல்லது செய்தார்கள் (அ) யார் நல்லது செய்வார்கள் என்பதன் அடிப்படையில் வாக்குகள் எப்படி பிரிகிறது ?
11. அரசியல் புரிதலின்மை , அரசியல் ஆர்வமின்மை, அரசியல் குழப்பம், அரசியல் மடமை, அரசியல் அலட்சியம், அரசியல் வெறுப்பு உட்பட்ட காரணிகளால் யாருக்கு வாக்களித்தால் என்னாக போகிறது ? என அளிக்கப்படும் வாக்குகள் எங்கு  செல்கிறது ?  
12. மதத்தின் அடிப்படையிலான, ஜாதி அடிப்படையிலான வாக்குகள் எங்கு செல்கிறது ?

இக்கேள்விகளுக்கான பதிலே யார் ஆட்சிக்கு வரமுடியும் என்பதற்கான பதிலாகவும் இருக்க முடியும். வாருங்கள் இதற்கு என்ன பதிலாக இருக்க முடியும் என்பதை யூகிக்கலாம். 

இம்மனநிலை மாற்றத்தால் பலன் அடையும் கூட்டணி  எது ? நம் பதில்கள் என்ன ?

1. பதில் : கட்சிக்கு எதிராக இருக்கும் வாக்குகள்  பல்வேறு வகைகளில் பிரியலாம். முக்கியமாக பிரதான எதிர்கட்சிக்கோ, மாற்றத்திற்காக நிற்கும் கட்சிகளுக்கு ஒருவாய்ப்பை தரலாம் என்ற நோக்கிலோ, வளர்ச்சி அடைந்து வரும் கட்சிக்கோ, யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்களோ அங்கெல்லாம் செல்லலாம். தமிழ்நாட்டை பொறுத்தளவில் இது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் திமுகவை பொறுத்தவரையில் மிகப்பெரிய அதிர்வலை  இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் இருக்கத்தான் செய்யும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லையென்பதால் எதிர்ப்பு இல்லை. அதே சமயம் ஆதரவும் இல்லை. பாஜகவை பொறுத்தவரையில் 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு எதிர்ப்பு இருந்தால் அது பாஜகவினை பாதிக்கப்போவதில்லை. ஏனென்றால் இப்பொழுதுதான் பாஜக வளரவே தொடங்கி இருக்கிறது. ஒருவேளை பாதித்தால் அது பாஜகவில் உள்ள கூட்டணி கட்சிகளையே பாதிக்க வாய்ப்புள்ளது.  தேசிய கட்சிகள்  எதனுடனும் கூட்டணி இல்லாமல் திமுக எதிர்ப்புடன் தனித்து போட்டியிடும் அதிமுகவில் பிரிவதற்கு எதுவும் இல்லை. வருவதற்கே உள்ளது. ஆக, திமுக கூட்டணி எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும்  நாம் தமிழருக்கும்,  பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் திமுகவிற்கும், பாஜக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கும், அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கும் செல்ல வாய்ப்புள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் கடந்த முறையை விட இம்முறை வாக்கு சதவிகிதம் திமுக கூட்டணிக்கு குறைவாகவும் பாஜகவிற்கு அதிகமாகவும் வாய்ப்புள்ளது. திமுகவிற்கு எவ்வளவு குறைகிறது மற்றும் பாஜகவிற்கு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பொறுத்தே அதிமுகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதும் குறைவதும்.  

2. பதில் : காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கவே இடம் இல்லாமல் மோடி ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்பதே முன்னிலையில் இருப்பதால் ஆதாயம் பெறப்போவது பாஜக மட்டுமே. பாஜக எதிர்ப்பு வலுப்பெற்றால் திமுக வாக்குகள் சிதறடிக்கப்படாமலும் நடுநிலை வாக்காளர்களினுடைய வாக்குகளும் திமுகவிற்கும் கிடைக்கும். அதிமுக இந்த கேள்விக்கான பதிலில் இல்லை. 

3. பதில் : தேர்தலில் சீட்டு கிடைக்கவில்லை, நிறுத்தியிருக்கும் வேட்பாளருக்கு வேலை செய்ய விருப்பம் இல்லை, உட்கட்சி பூசல், கூட்டணி கட்சிகள் சரி வர வேலை செய்வதில்லை, தலைமையின் மேல் அதிருப்தி, பிரச்சாரம் எடுபடவில்லை போன்ற காரணங்களுக்காக சோர்ந்திருக்கும் தொண்டர்கள் உள்ளடி வேலைகள் செய்து யாருக்கு வாக்களித்தால் தங்கள் எதிர்ப்பை காட்டமுடியுமா அவர்களுக்கும், பலபேர் தங்களுக்கு பிடித்த இரண்டாவது கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியை விடவும் அதிமுக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்படுவதை காண முடிகிறது.  இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உட்கட்சி பூசலிலும், மதிமுக திமுகவுடனும் சுமூகமாக வேலை செய்ய முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜகவில் இணைந்துள்ள பாமக மற்றும் தினகரனின் அமமுகவை கட்சிக்காரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை. 

4. பதில் : முதல் தலைமுறை மற்றும் இளைஞர்களின் வாக்காளர்களின் வாக்குகள் நோட்டாவிற்கும், இதுவரை ஆட்சி அதிகாரத்திற்கு வராமல் இருக்கும் கட்சிக்கும், மாற்றத்திற்காக பார்க்கப்படும் கட்சிக்கும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கும் செல்கிறது. தமிழ்நாட்டில் இவ்வாக்கினை பெறுவதில் முதன்மை இடத்தில இருப்பது நாம் தமிழர் கட்சி. அடுத்தபடியாக மோடி, அண்ணாமலை கவர்ச்சிக்காக பாஜகவிற்கும் , கமல் ஆதரிப்பதால் திமுகவிற்கும் கணிசமான வாக்குகள் செல்லலாம். 

5. பதில் : இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நகரங்கள் திமுகவிற்கும் கிராமங்கள் அதிமுகவிற்கும் சாதகமாக இருந்துள்ளன. இதை தாண்டி, இங்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று பார்த்தால், அனைத்து இடங்களிலும் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அதிகமாக பெறுகின்றனர் நாம் தமிழர். பாஜகவை பொறுத்தவரையில் மாற்றத்தை விரும்பும் மற்றும் இந்திய அளவில் உலக அளவில் யோசிக்க கூடிய படித்த நகர இளைஞர்களின் வாக்குகளையும் மேல்தட்டு வர்க்கத்தினரின் பலரது வாக்குகளை பல இடங்களில் இருந்தும் பெற முடிகிறது. நகர்புறத்தில் அதிகம் பெறுகிறது மக்கள் நீதி மையம். 

6. பதில் : தமிழ்நாட்டின் அரசியலை அழுக்காக்கியதில் முக்கிய பங்காற்றியதுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம். ஏதோ ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நடைமுறைபடுத்தப்பட்ட  இக்கலாச்சாரம் இப்பொழுது காணும் இடங்களில் எல்லாம் கரைபுரண்டோடுகிறது. 2017ஆம் ஆண்டு நடந்த சென்னை ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு ஆளும்கட்சியான அதிமுகவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி சென்னையை தங்கள் கோட்டை என சொல்லும் திமுகவை டெபாசிட் இழக்க செய்தது ஓட்டுக்கு பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உலகத்துக்கே பேருதாரணமாக அமைந்தது. தேர்தல் வந்தால் குதூகலமாகி ஓட்டுக்கு பணம் வரும் என்று மக்களும் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் பணம் வந்தால்தான் ஓட்டே அளிப்போம் என்ற நிலையில் இருக்கின்றார்கள் என்றால் இதை அரசியல் அவலம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல ? தங்களது சக்திக்கேற்ப அனைத்து கட்சிகளும் இதை செய்யும் என்றாலும் கூட அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள கட்சிகளால் இதை திறம்பட செயல்படுத்த முடிகிறது. ஆளும் கட்சியாக இருந்தால் இன்னும் பலம். 
இடைத்தேர்தலுக்கு ஒருகுடும்பத்திற்கு 10000 முதல் 20000 வரையும், சட்டமன்ற தேர்தலெனில் 4000 முதல் 6000 வரையும் நாடாளுமன்ற தேர்தலெனில் இன்னும் கொஞ்சம் குறைவாகவும் கொடுக்கப்படுவதாக செய்தி. யாரை குறிவைத்து பணப்பட்டுவாடா நடக்கிறது என்று பார்த்தால் அன்றாட கூலியை நம்புவர்களையும், வறுமைக்கோட்டில் இருப்பவர்களையும் எளிதாக அணுகி தங்களது கைப்பாவையாக மாற்ற முடியும் என்பதால் அவர்களே முதல்குறி. இவர்களே எந்த கட்சி மாநாடு போட்டாலும் அதனை வெற்றி மாநாடாக மாற்றுபவர்கள். இரண்டாவது, தமது கட்சிக்கு வாக்களிப்பவர்களாக அறியப்படும் வாக்காளர்களை/ குடும்பத்தை கட்சிக்காரர்களின் மூலமாக அறிந்து அவர்களை நோக்கிய பணப்பரிமாற்றம். யார் பணத்தை செலவு செய்வது என்ற கேள்வியை முன்வைத்தால், வெற்றி பெற்றால் யாருக்கு ஆதாயம் கிடைக்கிறதோ அவர்கள் செலவு செய்வர். கட்சி எந்த உதவியும் செய்யாத பட்சத்தில் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு பணபரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் பாஜகவிற்கு முக்கிய தேர்தல் என்பதால் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்தே சில தொகுதிகளை குறி வைத்து செயல்படுவதால் அங்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது கூட நெல்லையில் நான்கு கோடி  கைப்பற்றப்பட்டுள்ளது. திமுகவினை பொறுத்தவரையில் ஏற்கனவே எம்.பி ஆக இருந்தவர்களும், மத்திய அமைச்சராக இருந்தவர்களும், முக்கிய தலைவர்களின் மகன்களும் போட்டியிடுவதால் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் சொந்த செலவில் பணப்பட்டுவாடா நடக்கலாம். காரணம் என்னவென்றால் ஒருவேளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அதிமுகவினை பொறுத்தவரை இம்முறை செலவு செய்வது வீண். சட்டமன்ற தேர்தலில் பார்த்து கொள்ளலாம் என்று நினைக்கலாம். அதன் காரணமாகவோ என்னவோ முக்கிய தலைவர்கள் பல பேர் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை போலும். கட்சித்தலைமைக்கும் இதே எண்ணம் இருக்கலாம்.  ஆக மொத்தத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வது கடினம் என்றாலும் கூட, எந்த கட்சியால் தொகுதியில் கட்சிக்காரர்களை தாண்டி அனைத்து பகுதிகளுக்கும் பிரச்சினை எதுவும் இல்லாமல் பணப்பட்டுவாடா செய்ய முடிகிறதோ அவர்களுக்கே வாக்குகள் செல்லும். 

7. பதில் : நான் முன்னரே சொன்னது போல் கருத்துக்கணிப்பு பல உள்நோக்கங்களை கொண்டு வெளியிடப்படுகிறது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் தென்படும் பல போலி கருத்துக்கணிப்புகள் உள்பட. அதில் முக்கியமான ஒன்று இந்த கட்சிதான் வெற்றி பெரும் என்று திட்டமிடப்பட்டு பரப்பப்படுவது. அதோடு, தன் குடும்பத்தினர் எதற்கு வாக்களிக்க போகிறார்கள், தம் நண்பர்கள் எதற்கு வாக்களிக்க போகிறார்கள், தம்மை சுற்றியிருப்பவர்கள் பெரும்பாலும் எதற்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதன் அடிப்படையிலும் ஒரு தனிமனித ஓட்டு தீர்மானிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் தேசிய அளவில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் பெரும்பாலான கருத்துக்கணிப்பில் இருப்பதால் அவர்களே இக்கேள்விக்கான பதிலில் முந்துகின்றனர். சமூக வலைதள பக்கத்தில் ஆதரவுக்கரம் நாம் தமிழர் பக்கமே நீள்கிறது. ஆனால் நகரத்தை தாண்டி முக்கியமாக கடைக்கோடியில் வாழும் மக்களிடத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை இம்முறை ஏற்படுத்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

8. பதில் : தேர்தல் காலத்தில் ஊர் ஊராக வரும் பிரச்சார வாகன ஒலிபெருக்கியின் அலறல் கேட்டவுடன் அதன்  பின்னால் ஓடி ஓடி ஒவ்வொரு கட்சியினுடைய துண்டு பிரசுரங்களை வாங்கியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்படி நடந்த தேர்தல் பிரச்சாரம் இப்பொழுது நவீன காலத்திற்கேற்ப தொலைக்காட்சி விளம்பரங்களிலும், இணையதள பக்க விளம்பரங்களிலும், செய்தித்தாள் விளம்பரங்களிலும், திரையரங்குகளிலும் அமோகமாக நடக்கிறது. அது தவிர பிரச்சார வாகனங்களும் ஊர் ஊரக சென்று கொண்டுதான் உள்ளன. எது எப்படியோ தினமும் ஏதாவது ஒரு வகையில் மக்களின் காதுகளிலும் கண்களில் படும் வகையில் பிரச்சாரத்தை கட்டமைப்பதே ஒவ்வொரு கட்சியினுடைய தகவல் தொழில்நுட்ப பிரிவின் தாரக மந்திரமாக உள்ளது. இதைவிட ஒரு படி மேலே சென்று விளம்பரத்தை வெறும் வெற்று விளம்பரமாக மட்டும் இல்லாமல், ஏதேனும் ஒரு கருத்தோடு படத்தை போலவே கதை திரைக்கதையோடு மிகவும் ரசிக்கும்படியாக தமது கட்சியினை போற்றும் வகையிலோ எதிர்கட்சியினரை கிண்டலடிக்கும் வகையியலோ எடுக்கப்படும் ஒரு நிமிட படக்காட்சிகள் விரைவாக பேசுபொருளாகின்றன. ஆனால் இதற்கு பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் சிறிய கட்சிகளுக்கு எப்பொழுதும் ஆட்டோ பிரச்சாரமே கைகொடுக்கின்றன.  தேர்தல் அறிவித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரத்தில் முதலில் முந்தியது அதிமுக. அதனால் சுத்தகரித்துக்கொண்ட திமுக, அந்த காலம் முதலே விளம்பரத்திற்கு பெயர் போன திமுக, தற்பொழுதும்  பல்வேறு விளம்பர யுக்திகளை பின்பற்றி இணையதள பக்கங்கள் வரை விளம்பரப்படுத்துகின்றனர். பாஜகவும் விடுவதாக இல்லை. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர். எனவே இதனடிப்படையில் விழும் வாக்குகள் திமுக, அதிமுக, பாஜக விற்கு செல்லலாம். வெளியூர் வேட்பாளரும், அறிமுகமே ஆகாத வேட்பாளரும் வெற்றி பெற முடிகிறது என்று சொன்னால் இந்த கேள்விக்கான பதிலும் ஒரு காரணம். 

இணையத்தில் மட்டும் அரசியல் செய்தால் போதுமா ? என்ற கேள்விக்கு இன்னொரு 40 (அ) 50 வருடங்களுக்கு பிறகு ஆ ம் என்ற பதில் ஒருவேளை போதுமானதாக மாறலாம். 

9. பதில் :  இந்த கேள்விக்கான பதில் மிக எளிமையானது. எந்த வேட்பாளர் எளிதில் அணுகக்கூடியவராக இருக்கிறார், எந்த வேட்பாளர் தொகுதிக்காக போராடி திட்டங்களை பெறுவார், எந்த வேட்பாளரின் கட்சி அந்த தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்கும் என யோசிப்பதில் இருந்து பிரியும் வாக்குகள் அத்தொகுதி சார்ந்த வேட்பாளருக்கும், கடந்த கால வரலாற்றில் நல்ல இடம் பிடித்த வேட்பாளருக்கும், அந்த தொகுதியை பற்றி அடிக்கடி பேசி  தொகுதிக்கு வருகை தரும் கட்சியின் வேட்பாளருக்கும் செல்லலாம். இது தொகுதி சார்ந்து இருப்பதால் கட்சி சார்ந்து வகைப்படுத்த முடியாது. ஆனால் திமுகவை பொறுத்தவரை ஒரு தொகுதியில் பல முறை போட்டியிட்டு வென்றவர்கள் பலபேர் இம்முறையும் பல தொகுதிகளில் போட்டியிடுவது அவர்களுக்கு சாதகம். பாஜகவை பொறுத்தவரை முன்னணி தலைவர்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதனால் வாக்கு சதவிகிதம் சற்று அதிகரிக்கலாம். அதிமுகவை பொறுத்தவரை சில தொகுதிகளில் வேட்பாளர்களின் தனி செல்வாக்கால் முன்னணி பெறுகின்றனர். (குறிப்பாக கோவை )

10. பதில் : போன கேள்வியும் இந்த கேள்வியும் ஒரே மாதிரி தெரிந்தாலும் இது நேரடியாக கட்சி தலைமையையும் ஆட்சி நடத்தும் திறனையும் சார்ந்துள்ளது. என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தால் ஏதேனும் வகையில் நாம் பயன் அடைந்தோமா ? நடக்கும் ஆட்சி திருப்திகரமாக இருக்கிறதா ? வாழ்வதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறதா ? வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா ? நீண்டகால கோரிக்கைகள் அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டனவா ? குடும்பத்துக்கான, ஊழலுக்கான ஆட்சியாக இருக்கிறதா இல்லை மக்களுக்கான ஆட்சியாக இருக்கிறதா ? இப்படியான பல கேள்விகளுக்கான பதிலை யோசிப்பதில் இருந்து பிரியும் வாக்குகள் உள்ளபடியே நல்லது செய்யும் கட்சிக்குத்தான் செல்லும். ஆனால் நடைமுறையில் இதற்கு மாறான ஒரு யோசனையும் இருக்கத்தான் செய்கிறது. என்னவென்றால், குறைந்தபட்சம் நல்லவருக்கு வாக்களிப்பது. அதாவது இவருக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை என்ற ரீதியில் வாக்களிப்பது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பெண்களின் வாக்குகளை பெறுவதற்காகவே கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கான மாத உதவித்தொகை ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவை பொறுத்து திமுகவிற்கு வாக்குகள் கூடலாம். (வெளியில் இருந்து பார்க்கும்போது நல்ல திட்டங்கள் போல் இருந்தாலும், வாக்குக்காக செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்கள் தேவையா என்பது விவாதத்துக்கு உரியது) 

11. பதில் : படித்தவர்களின் வாக்குகள் பலனில்லாத நோட்டாவிற்கும், படிக்காத பாமரனின் வாக்குகள் சுயேட்சைகளுக்கு அதிர்ஷ்டமாகவும் அமைகின்றன. 

12. பதில் : மதத்தினை பொறுத்தவரையில், சிறுபான்மையினர் காவலராக தங்களை எப்பொழுதும் காட்டி கொள்ள முற்படும் திமுக கிறித்துவ, இஸ்லாமியர்களின் வாக்குகளை கணிசமாக பெறலாம். பாஜகவில் இருந்து பிரிந்த பின்னர் அதிமுகவிற்கும்  சிறுபான்மையினர் வாக்குகள் வர கூடிய சூழல் உள்ளது. அதே சமயம் திமுக செய்த அதே வேலையை தற்போதைய பாஜகவும் செய்வதால், அதாவது இந்துக்களுக்கான கட்சியாக, தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தும் கட்சியாக தங்களை காட்டிக்கொள்வதால் பெரும்பான்மையான இந்துக்களில் குறிப்பிடத்தகுந்த சதவிகிதம் பாஜகவிற்கு வரலாம். பெரும் சதவிகிதம் கட்சி சார்ந்து பிரியலாம். மதத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் அரசியல் சுற்றுவது சாதியை மையத்தில் வைத்தே. பல்வேறு சாதிகள், ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் என பிரியும் வாக்குகள் தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ தொகுதிகளை கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து விடுகின்றனர் பெரிய கட்சிகள். தங்களது சாதியை முன்னேற்ற வழிவகை செய்யாமல் சாதியை ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வர நினைப்பவர்களே அதிகம். சாதிப்பிரிவினையை மறைமுகமாக தூண்டி  சாதிய பற்றுதலை சாதிய வெறியாக்குகின்றனர் தங்களது சுயநலத்துக்காக. சாதியை பற்றி பேசாமல் இருந்தாலே, சாதிய பற்றுதல் காலப்போக்கில் கழிந்து விட வாய்ப்புள்ளது. ஆனால் அதை அப்படியே விட்டால் இவர்களது பலத்தை எப்படி காட்டுவது எப்படி சீட்டுகளை பெறுவது ? அதற்காகவே சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டியை போல தெரிந்தோ தெரியாமலோ மனித சமுதாயத்துடன் ஒட்டி வந்த சாதி எனும் தூசியை அவர்களை காக்கும் கவசமாகவும் கௌரவமாகவும் வசதிக்கேற்ப மாற்றிவிட்டனர். ஒரு நல்ல சாதிய தலைவரின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் சாதிய நல்லிணக்கத்திற்கு போராடுபவராகவும் தனது சாதியில் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள மனிதர்களை மேலே தூக்கி விடுவதற்க்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.  சாதி ஒழிய வேண்டும், மத சார்பற்ற கூட்டணி, சமூக நீதி என்று பேசுபவர்கள் உட்பட அனைத்து கட்சியினரும்  தொகுதிகளில் சாதியை மையப்படுத்தியே வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே சாதி சார்ந்த வாக்குகள் தத்தமது சாதி சார்ந்த கட்சி மற்றும் சாதி சார்ந்த வேட்பாளருக்கு ஆதரவாகவும் தத்தமது கட்சிக்கு எதிரான பகைசாதி சார்ந்த கட்சி மற்றும் பகைசாதி சார்ந்த வேட்பாளருக்கு எதிராகவும் செல்கிறது. 

அடுத்து நேரடியாக கருத்துக்கணிப்பிற்குள் செல்லலாம். நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியில் வெல்வதற்கு வாய்ப்புள்ள கூட்டணி எது ? 


2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ? தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல்  அரசியல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.